Tuesday, December 14, 2010

நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு மரண அச்சுறுத்தல்

நீர்கொழும்பு அல்பலாஹ் மகாவித்தியாலயத்தின் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹானுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும்,பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரியும் மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

சில நபர்களால் கடிதம் மூலமாக தனக்கு விடுக்கப்பட்டுள்ள விடுக்கப்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாகவும், இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி சிலரால் பெறப்பட்டுள்ள மகஜர் தொடர்பாகவும் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.அத்துடன் நீர்கொழும்பு வலய கல்வி அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

அதிபர் சேவை வகுப்பு 2-11 ற்கான எழுத்துப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகள் பெற்று (நீர்கொழும்பு வலயத்தில் முதலிடம்) சித்திடைந்துள்ள இவர், முன்னாள் ஆசிரிய ஆலோசகரும் கவிஞரும் பிரபல ஊடகவியலாளருமாவார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் மூன்று வருடகாலம் நிகழ்சித் தயாரிப்பு உதவியாளராக பணியாற்றியுள்ளார். அத்துடன் புத்தகங்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார்

அல்பலாஹ் மகாவித்தியாலயத்தில் இவர் பிரதி அதிபராக கடமையை பொறுப்பேற்றது முதல் நிருவாக ரீதியிலும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையிலும்,பாடசாலையை ஊடகங்கள் வாயிலாக பிரபல்யப் படுத்துவதிலும் தனது முழுப்பங்களிப்பையும் வழங்கி பாடசாலையை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றமையை பொறுக்காத சிலரே,இவர் சார்ந்த இஸ்லாமிய ஜமாத் பிரிவை முன்னிலைப்படுத்தி இவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதுடன் இடமாற்றலாகி செல்லுமாறு வற்புறுத்தியும்,மகஜர்களில் கையொப்பமும் பெற்றுள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.பாடசாலையின் பெயரில் alfalahmv.blogspot.com என்றபெயரில் ஜனாப் ஷாஜஹான் இணையத்தளம் ஒன்றை ஆரம்பித்துள்மையும் மாணவர்களின் ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவர மாணவர்களை உற்சாகப்படுத்துயுள்மையும் கடந்த சில மாத காலத்தில் நிகழ்ந்தவையாகும்

இப்பாடசாலையில் கடந்த ஒன்பது வருட காலப் பகுதியில் ஆறு அதிபர்கள் பல்வேறு அழுத்தங்களின் காரணமாக இடமாற்றலாகியும்,இடமாற்றல் செய்யப்பட்டும் பொறுப்பிலிருந்து விலகியும் உள்ளனர்.இவர்களில் ஒருவர் கல்வி நிருவாக சேவை அதிகாரியாவார். மூவர் அதிபர் சேவையை சேர்ந்தவர்களாவர்.இருவர் ஆசிரியர் சேவையை சேர்ந்தவர்களாவர்.இவர்களில் எவரும் பிரதி அதிபர் ஜனாப் ஷாஜஹான் பின்பற்றும் இஸ்லாமிய ஜமாத்தை சேராதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,10-12-2010 அன்று போருதொட்ட ஜும்மா பள்ளிவாசல்களில் பிரதி அதிபரை பாடசாலையிலிருந்து இடமாற்றம் செய்ய வேண்டுமென்று கோரி மகஜர்களில் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளதன் பின்னணியில் பெரியமுல்லை பிரதேசத்தை சேர்ந்த அரசியல்வாதிகள் இருவர் இருப்பதாகவும் இவ்விவகாரத்தை அவர்கள் தமது அரசியல் இலாபத்திற்கு பயன்படுத்துவதாகவும் பிரதேசமக்கள் குறிப்பிடுகின்றனர்.

மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு எழுதப்பட்டுள்ள கடிதத்தின் பின்னணியில்பாடசாலையின் ஆசிரியர்கள் சிலரும் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர்கள் சிலரும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிலரும் இருப்பதாகவும் பிரதேச மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை,பாடசாலையைவிட்டு இடமாற்றலாகிச் செல்ல வேண்டாம் என்று பல்வேறு தரப்பினரும் பிரதி அதிபர் ஷாஜஹானுக்கு நேரிலும் தொலைபேசி வாயிலாகவும் கோரிக்கை விடுத்து வருவதுடன் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.

.